முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான 4 தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி, அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்தது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தது தொடர்பாக, பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை ரத்து செய்யக்கோரி ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் நடைபெற்ற விசாரணையில், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக தகுதியான அதிகாரி புகார் அளிக்காமல் காவல்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கில் காலதாமதமாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான 4 தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
















