ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இஸ்ரேலில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய Travel Influencer ஒருவர் போரின் கோர முகத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த சௌமில் அகர்வால் என்ற இளைஞர், சுற்றுலாப் பயணியாக இஸ்ரேல் சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்தப் போர்ச் சூழலில் சிக்கிக்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் தேதியன்று அதிகாலையில் எழுந்தது முதல், நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியதாக அவர் விவரித்துள்ளார்.
இவ்வளவு பெரிய போர் நடக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், சுற்றுலாவுக்காக இங்கு வந்து தற்போது தனியாக மாட்டிக் கொண்டேன் எனவும் கூறியுள்ள அவர், சைரன் சத்தம் கேட்ட அடுத்த நொடியே அறையை விட்டு வெளியேறி நிலத்தடி புகலிடங்களுக்கு ஓடுவதே கடந்த சில நாட்களாக தனது அன்றாட வாழ்க்கையாகி விட்டதென அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழலிலும் இஸ்ரேல் மக்கள் காட்டும் தைரியம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக சௌமில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் நாட்டு ராணுவத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என இஸ்ரேல் மக்கள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
















