இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதியினரின் மகனும், இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்டகால தோழியும் தொழிலதிபருமான சானியா சந்தோக்கை கரம் பிடித்தார்.
தெற்கு மும்பையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழா, விளையாட்டு மற்றும் வணிக உலகின் சங்கமமாக அமைந்தது. மணமகள் சானியா சந்தோக், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரவி காயின் பேத்தி ஆவார். அர்ஜுன் மற்றும் சானியா ஆகிய இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றன.
அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கரின் நெருங்கிய தோழியான சானியா, உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் போது அர்ஜுனுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பல்வேறு திருமண சடங்குகளுக்கு பிறகு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தெற்கு மும்பையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், பிசிசிஐ நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ள இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
















