சென்னை உயர்நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம் ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று, கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
2018-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தர்மாதிகாரி, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
















