ஆந்திர பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க புதிய மக்கள்தொகை ஊக்கத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு அறிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில்கொண்டு இளம் தலைமுறையினர் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு, புதிய மக்கள் தொகை திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2-வது அல்லது 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு அறிவித்துள்ளார்.
மேலும், 3-வது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊட்டச்சத்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 3-வது குழந்தை பிறந்தால், ஒரு வருடம் முழு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பும், தந்தைகளுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் குழந்தைகளைப் பெறும் அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கும் சட்ட திருத்தங்களும் பரிசீலனையில் உள்ளன. இதுமட்டுமின்றி பிறக்கும் குழந்தைகள் 18 வயதை அடையும் வரை, அவர்களுக்கு இலவச கல்வி வழங்கவும் மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
















