டி20 உலகக்கோப்பை 2026 தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய வெற்றி பெற்று சரித்திரம் படைக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், இரு அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்…
கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து என்ற சமபலம் வாய்ந்த அணிகள் மல்லுக்கட்டும் போட்டி என்பதால், பேட்டர்களின் வாணவேடிக்கையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
3வது முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் உள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் மற்ற இந்திய மைதானங்களிலிருந்து வேறுபட்டதாகவே கருதப்படுகிறது. சிவப்பு மண், கருப்பு மண் மற்றும் இரண்டும் கலந்த கலப்பு மண் என மூன்று வகையான ஆடுகளங்கள் அகமதாபாத்தில் உள்ளன. கருப்பு மண் ஆடுகளங்கள் மெதுவாகவும், பந்து திரும்புவதற்கும் வாய்ப்பளிக்கும் என்றும் சிவப்பு மண் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு கைகொடுக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
ஆனால் இறுதிப்போட்டிக்கு, சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்த ஹைப்ரிட் ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும், போட்டி செல்ல செல்ல பந்து நின்று வரவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டர்கள் ரன்வேட்டையை நடத்த வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அகமதாபாத் ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும்… புதிய பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் தொடக்கத்திலேயே பும்ராவால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும், ஸ்பின்னர்களை பொறுத்தவரையில், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நடுப்பகுதியில் ரன்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்…
நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில், பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் மேட் ஹேன்றி, லாக்கி ஃபெர்குஷன் ஆகியோர் ஆபத்தானவர்களாகவே அறியப்படுகிறார்கள். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான ஸ்பின் கூட்டணி, ஆடுகளம் சற்று மெதுவாகும் பட்சத்தில் இந்திய பேட்டர்களுக்குச் சவால் அளிக்கக் கூடும்.
நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அபார பார்மில் உள்ளனர். குறிப்பாக அரையிறுதி ஆட்டத்தில் ஃபின் ஆலன் சதம் விளாசி அசத்தியிருந்தார். அவர்களை கட்டுப்படுத்துவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். அரையிறுதியில் சஞ்சு சாம்சன் விளாசிய 89 ரன்கள் மற்றும் நியூசிலாந்தின் ஃபின் ஆலன் ஆடிய அதிரடி ஆட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இறுதிப்போட்டி ஒரு த்ரில்லர் போட்டியாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், இந்திய அணிக்கு எதிராக, இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என்று கூறியிருக்கிறார். நியூசிலாந்து கோப்பையை வெல்வதற்காக கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை உடைத்தாலும் கவலையில்லை என்றும் வார்த்தையில் வாள் வீசியிருக்கிறார் சாண்ட்னர்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ரசிகர்களை அமைதியாக்குவதே இலக்கு’ என்று கூறியிருந்த நிலையில், அதே பாணியில் தற்சமயம் மிட்செல் சாண்ட்னரும் கூறியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 174 ஆக உள்ளது… இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும் என்றே எதிர்பார்க்கலாம்..
இந்தியா – நியூசிலாந்து அணிகள் டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து அணியே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியது…அதனால் இந்த முறை நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், கோப்பையையும் கைப்பற்றி இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
















