ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலில், அந்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் கோலெஸ்தான் அரண்மனை சேதமடைந்துள்ளது. ஈரானின் தேசிய மற்றும் கலாச்சார அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மையப் பகுதியில் கோலெஸ்தான் அரண்மனை அமைந்துள்ளது. இது முதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுவர் நகரமான சஃபாவிட் வம்சத்தின் போது கட்டப்பட்டது.
பின்னர், ஈரானின் ஐந்தாவது சஃபாவிட் ஷாவான அப்பாஸ் தி கிரேட், வடக்குப் பகுதியில் ஒரு பெரிய தோட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சாந்த் வம்சத்தைச் சேர்ந்த கரீம் கானால் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டது.
1779ல் ஆட்சிக்கு வந்துபின் தெஹ்ரானை நாட்டின் தலைநகராக மாற்றிய கஜார் வம்சத்தின் அரசு அதிகார மையமாக இந்த அரண்மை விளங்கியது. பல நூற்றாண்டுகளாக இந்த பிரம்மாண்ட அரண்மனை கஜரி கட்டிடக்கலைக்கும் கலைநயத்துக்கும் ஒரு சிறந்த சான்றாக உள்ளது. சொல்லப்போனால் பாரசீக கலைகளில் ஐரோப்பிய பாணிகளை ஒருங்கிணைத்து இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் பெரும்பகுதி கஜர்களின் 131 ஆண்டுகால ஆட்சியின் போது கட்டப்பட்டுள்ளது.
பஹ்லவி ஆட்சி காலத்தில் கோலெஸ்தான் அரண்மனையில் மேலும் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. 1926-ல் ரேசா ஷா, 1967-ல் முகமது ரேசா ஷா மற்றும் ஷாபானு ஃபரா ஆகியோரின் முடிசூட்டு விழாக்கள் இந்த கோலெஸ்தான் அரண்மனையில் தான் நடந்தன. இதற்கிடையே பழைய அரண்மனை கட்டமைப்புகள் நவீன மற்றும் வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன.
சாந்த் வம்சத்தைச் சேர்ந்த கரீம் கானின் உட்புற இல்லத்தின் ஒரு பகுதியில் பளிங்குக் கல்லால் ஆன சிம்மாசனம் அமைந்துள்ளது. கஜர் ஆட்சிக் காலத்தில் கோடைக்கால அறையாகப் பயன்படுத்தப்பட்ட குள வீடு உள்ளது.
இந்த அரண்மனையில் உள்ள சலாம் மண்டபத்தில் மயிலாசனம் உள்ளது. இது 1739ம் ஆண்டு டெல்லியின் மீது படையெடுத்த நாதிர் ஷா, முகலாயர்களிடமிருந்து கோடிக்கணக்கான மதிப்பிலான வைரம், வைடூரியங்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்தபோது இந்த புகழ்பெற்ற மயிலாசனத்தையும் கவர்ந்து சென்றார்.
அடுத்து ஃபத் அலி ஷாவால் கட்டப்பட்ட வைர மண்டபம் உள்ளது. இது கண்ணாடி வேலைப்பாடு மற்றும் வைரம் போன்ற வளைந்த கூரைகளுக்குப் புகழ் பெற்று விளங்கியது.
மேலும் 1883-ல் கட்டி முடிக்கப்பட்ட அபியாஸ் அரண்மனையில் ஒட்டோமான் பரிசுகள் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது, எட்டு முக்கிய அரண்மனை கட்டமைப்புகளைக் கொண்டுள்ள கோலெஸ்தான் அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் கையெழுத்துப் பிரதிகளின் நூலகம், புகைப்படக் காப்பகம் மற்றும் ஆவணங்களின் காப்பகம் என அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.
1974 ஆம் ஆண்டு ஈரானின் 5,000 ரியால் ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்ற கோலெஸ்தான் அரண்மனை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகும்.
தற்போது நடைபெற்று வரும் போரில் அரண்மனையின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. அரிய வகை கலைப்பொருட்கள் சுக்குநூறாக உடைந்துள்ளன.
ஈரானின் பாரசீக பாரம்பரியத்துக்குள் செல்ல ஒரு புகழ்பெற்ற நுழைவாயிலாக இருந்த கோலெஸ்தான் அரண்மனை சுவர்கள் போரில் இடிந்து விழுவது என்பது வெறும் செங்கற்கள் விழுவதல்ல, ஒரு நாகரிகத்தின் சுவடுகள் மறைவதாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.
















