டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே நாடு மற்றும் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையைத் தக்கவைத்த ஒரே அணி என்ற பெருமைகளை இந்தியா பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
பல்வேறு துறைகளில் இந்திய இளைஞர்களிடம் பொதிந்துள்ள அபாரமான திறமைக்கு இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வெற்றி இந்திய அணியின் அசாத்திய திறன், உறுதி மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியதாகவும், ஒவ்வொரு இந்தியரின் மனதில் பெருமையையும், மகிழ்ச்சியையும் இந்த வெற்றி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அன்புமணி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், ராஜ்நாத் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
















