திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் மாநாடு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமையன்று சிறுகனூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதும் இருந்து திமுகவினர் வருகை தருவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த முறையாக ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் திமுகவினர் வந்த வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
போக்குவரத்தை சீரமைக்க முறையான ஏற்பாடுகளை செய்யாமல், மெத்தனம் காட்டியதே சிரமத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















