ரீல்ஸ் மோகத்தால் ஓடும் ரயிலில் ஆடி, பாடி சிலர் பயணிகளை தொந்தரவு செய்ததாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரீல்ஸுக்காக உயிரையே பணயம் வைத்து பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பலரும் மெனக்கெடுகின்றனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் உயிரை விட்டவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஏராளம்…
ரயில்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் , கரீபிரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பல பயணிகளை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
மன்மோகன் வர்மா என்பவர் பதிவிட்ட வீடியோவில், தாம் பிலாஸ்பூரிலிருந்து லக்னோவுக்கு பயணித்தபோது ரயில் பெட்டிக்குள் இசையை ஒலிக்க செய்து சிலர் நடனமாடியுள்ளனர். அது பலருக்கும் தொந்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு புகாரளித்ததை அடுத்து அவர்கள் நேரில் வந்து எச்சரித்து சென்றனர்.
அமைதியாகவும், மன நிம்மதியுடன் செல்ல வேண்டுமென நினைத்த பயணம் மிகவும் துரதிர்ஷ்டமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், அனைவரும் ஒத்துழைத்தால் இனிமையான, அழகான பயணங்களை மேற்கொள்ளலாம் என ரீல்ஸ் பிரியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
















