ஈரானின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சி என தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் 10 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. ஈரானில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் குவைத்தில் ஒரு சிறுமி மற்றும் நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் என நாட்டின் முக்கிய 30 எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகளில் இருந்து தீ ஜுவாலைகள் என பதறவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
இந்த எண்ணெய் கிடங்குகளில் இருந்து தான்பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச எண்ணெய் சந்தையை கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத கொலைகார ஆட்சியை வீழ்த்துவதில் அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் அற்புதமான போர்த் திறனைக் காட்டியுள்ளதாக பாராட்டியதுடன், அதற்காக இஸ்ரேலுக்கு அமெரிக்கா நன்றியுணர்வுடன் இருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார். மேலும் தங்களுக்கான ஆட்சியை ஈரான் மக்களே தேர்ந்தெடுக்கும் நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
புதிய மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தொடங்க உள்ள ஈரான் மக்களின் வாழ்வாதார வாய்ப்பை முடக்காத வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கிறது.
அதே நேரத்தில், ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருப்பது அமெரிக்காவுக்கே தர்ம சங்கடத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் நான்காவது பெரிய உற்பத்தியாளரான ஈரான் தினமும் 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இது உலக எண்ணெய் உற்பத்தியில் 20 சதவீதமாகும். ஈரானில் உற்பத்தியாகும் எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விநியோகிக்கப்படுகிறது.
போர் தொடங்கியதால் ஏற்கனவே பிரெண்டின் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 7சதவீதம் உயர்ந்து 83 டாலராக அதிகரித்துள்ளது. இன்னும் போர் நீடித்தால் இந்த விலை 150 டாலராக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே கத்தார் LNG எண்ணெய் ஆலைகளை மூடிவிட்டது. சவூதி அரேபியாவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புக்களை இஸ்ரேல் தாக்கி இருப்பது சர்வதேச அளவில் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
போர் தொடங்குவதற்கு முன்னதாக, உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிக்கும் என்று ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குவதற்கு செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலை என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இப்போது அமெரிக்காவையே திகைப்படைய வைத்துள்ளது.
















