சுகாதார ஆய்வாளர் பணி நியமனம் தொடர்பான வழக்கில், 47 பணியிடங்கள் தவிர, மற்ற பணியிடங்களை நிரப்ப அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காந்திகிராம் கல்வி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்தவர்களை தற்காலிக தேர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இது குறித்த விசாரணையில், கல்வித்தகுதி சர்ச்சை வழக்கில் தொடர்புடைய 47 மனுதாரர்களுக்கும், 47 பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, காலியாக வைத்திருக்கப்படும் 47 பணியிடங்களையும், மேல் முறையீட்டு வழக்கின் முடிவின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,
தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்தது.
















