ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ஈரான் மீதான போரால் சீனாவுக்கு என்ன பாதிப்பு? என்ன லாபம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
ஷியா இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள ஈரானில் மத புரட்சி ஏற்பட்ட நாளிலிருந்தே அந்நாடு சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவில் இருந்துவருகிறது.
இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அழிப்பதே அரசியல் சாசனமாக வைத்துள்ள ஈரானுடன் மற்ற வளைகுடா நாடுகள் எச்சரிக்கையாகவே இருந்து வந்தன.
அமெரிக்காவுடன் நல்லுறவும், அமெரிக்க இராணுவத் தளங்களுக்குத் தங்கள் நாடுகளில் அனுமதியும் வழங்கியுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரானுக்கு எப்போதுமே ஒரு கோபம் உண்டு.
அணுசக்தி திட்டத்தை முடக்குவதற்காக ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் 10 நாட்களுக்குப் பிறகும் தொடர்கிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
சீனாவும் ரஷ்யாவும் உளவுத் தகவல்கள், இராணுவத் தொழில்நுட்பங்கள் மற்றும் நிதியுதவியை ஈரானுக்கு வழங்குகின்றன என்று கூறப்படுகிறது. சீனாவும், ரஷ்யாவும் குற்றச் சாட்டை வெளிப்படையாக மறுக்கவில்லை என்றாலும் இருநாடுகளும் அரசியல் ரீதியாக ஈரானுக்கு உதவுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் கச்சா எண்ணெய் தேவையில் 55 சதவீதத்துக்கும் அதிகமானவை மத்திய கிழக்கிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 13 சதவீதம் ஈரானில் இருந்து சீனாவுக்கு இறக்குமதியாகிறது.
ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்துக்கும் மேல் சீனாவின் பங்காகும். தள்ளுபடி விலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவது சீனாவுக்கு லாபகரமாக இருந்து வருகிறது.
2021ம் ஆண்டு முதல், 140 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சீனா, ஈரானிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. அதே ஆண்டு ஈரானின் எரிசக்தி, வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் 400 பில்லியன் டாலர்களை 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய சீனா உத்தரவாதம் அளித்தது. இதன் காரணமாகவே அமெரிக்க பொருளாதார தடையை ஈரான் கொஞ்சம் தாக்குப் பிடித்தது.
முன்னதாக 2010-ல் ஈரானின் அரசு நிர்வகிக்கும் தொலைபேசி மற்றும் இணைய நெட்வொர்க்குகளுக்கான கண்காணிப்பு அமைப்பை வழங்கும் 130 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சீனாவின் ZTE நிறுவனம் கையெழுத்திட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன், சீனாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வாங்குவதற்கு முடிவு எடுத்திருந்தது.
2023-ல் இருந்து இஸ்ரேலுக்கு மட்டும் 17.9 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா செய்துள்ளது. மேலும் வளைகுடாவில் உள்ள நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டும் அமெரிக்கா 33.77 பில்லியன்டாலர் வரை செலவு செய்துள்ளது.
தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறிவரும் நிலையில் தைவானுக்கு அமெரிக்கா உதவி செய்துவருகிறது.
எனவே மத்திய கிழக்கில் அமெரிக்கா செலவிடும் ஒவ்வொரு டாலரும் தனக்கு சாதகமாகவே சீனா பார்க்கிறது. மத்திய கிழக்கில் இராணுவ உதவி செய்வதால் தைவானுக்கு அந்த உதவியை அமெரிக்காவால் செய்ய முடியாது என்று சீனா கருதுகிறது.
இந்தப் பின்னணியில் மத்திய கிழக்கில் செல்வாக்கு மற்றும் தனது எரிசக்தி தேவை ஆகியவற்றுக்கு மற்ற வளைகுடா நாடுகளை விட ஈரானே சீனாவுக்கு முக்கியமானது. அதனால் தான் ஈரான் போரில் சீனா அமைதியாக இருப்பதாக பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
















