கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், சுத்தமான குடிநீர் கேட்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இருவரது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி நான்காவது வார்டில் உள்ள கீழ வன்னியர் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் சுத்தமான குடிநீர் கேட்டு சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தங்கவேல், வேலாயுதம் ஆகிய இருவரும் பேசினர்.
இந்நிலையில், இந்த இருவரது வீட்டின் முன்பு இருந்த குடிநீர் இணைப்பை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், இரண்டடி பள்ளம் தோண்டி துண்டித்துவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் இணைப்பை தற்காலிகமாக சரிசெய்துள்ளனர்.
இப்பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















