திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.
போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். மேலும் சிலர் பாட்டில்கள் மற்றும் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் காருக்கு பெட்ரோல் நிரப்பியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக நள்ளிரவுமுதல் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்று இருப்பு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பணிச்சுமையால் குழப்பமடைந்த பணியாளர் ஒருவர், கார் ஒன்றுக்கு டீசல் நிரப்புவதற்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த காரில் இருந்து பெட்ரோலை எடுக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.
காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தமிழக வாகன ஓட்டிகள் குவிந்தனர்.திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், காரைக்கால் அடுத்த மாவட்ட எல்லையான அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல்களை வாகனங்களில் நிரப்ப இருசக்கர வாகனங்களில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் வந்னர்.
மேலும் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்க வந்த சிலரை போலீசார் கடுமையாக எச்சரித்து விரட்டியடித்தனர். பெட்ரோல் பங்கில் தட்டுப்பாடு இல்லை என்றும் அறிவுறுத்தினர்.
















