தூத்துக்குடியில், 12ம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் – காளீஸ்வரி தம்பதியரின் 17 வயது மகள், கடந்த 10ம் தேதி மாலையில், இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது மகள் வீடு திரும்பாததால், அதுகுறித்து விளாத்திகுளம் மகளிர் காவல்நிலையத்தில் சுப்புராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தூத்துக்குடி – நெல்லை பிரதான சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பெற்றோரின் புகாரை முறையாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நெல்லை சரக டிஐஜி சரவணன் பேச்சு வார்த்தை நடத்தினார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் .
















