சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கிற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வடகொரியா தனது எல்லைகளை முழுமையாக மூடியது. இதனால் சீனாவுடனான ரயில் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, K27 என்ற சர்வதேச பயணிகள் ரயில் பெய்ஜிங்கிலிருந்து பியாங்யாங்கிற்குப் புறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் பியாங்யாங் இடையிலான இந்த ரயில் சேவை வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு சுமார் 24 மணிநேரம் 41 நிமிடங்கள் பயணித்து, சீன எல்லை நகரமான டான்டாங் வழியாக வடகொரியாவை அடையும். தற்போது இந்த ரயிலில் பயணம் செய்ய வணிக விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா திகழ்கிறது. இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















