காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கன்னியாகுமரியில் அக்கட்சியினர் போஸ்டர் ஓட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மார்த்தாண்டம், மேல்புறம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவோடு 13 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், சமுதாயத்தில் நன்மதிப்பையும், வாழ்வில் நல்ல நன்மைகளையும் அனுபவித்து விட்டு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், 13 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எதிராக அக்கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
















