மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார்.
மதுரை விமான நிலையம், தென்தமிழகத்தின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக விளங்குகிறது. இதனை முழுமையான சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.
இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக வான் கட்டுப்பாட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வருகை தந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வான் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் முரளிதர் மொஹோல், எல்.முருகன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மதுரை மக்களுக்கு இது உண்மையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டின் மீதுள்ள அன்பு, அக்கறையே இதைச் சாத்தியமாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், மதுரை மல்லிகைப்பூ வாசனை உலக முழுவதும் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார். உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்காவுக்கும் பல நாடுகளுக்கும் எளிதாக செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்
















