இன்ஸ்டா பிரபலங்களான தேவா மற்றும் ஜீவாவுடன் முதலமைச்சர் கலந்துரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டம் ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் சந்தி சிரிக்கும் நேரத்தில் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிக்கிடப்பது தான் முதலமைச்சரின் வேலையா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஹாய் கைஸ்…. நான் உங்கள் தேவா… என மழலை மொழியில் பேசும் இந்த சிறுவர்களை இன்ஸ்டாகிராமில் மட்டும் பத்து லட்சம் பேர் தொடர்கின்றனர். தேவாவின் பேச்சுக்கும் அவரது தம்பி ஜீவாவின் பாட்டுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே சமூக வலைதள உலகில் உருவாகியிருக்கிறது.
இப்படியாக அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராமின் தவிர்க்க முடியாத பிரபலங்களாக மாறியிருக்கும் தேவா மற்றும் ஜீவாவின் முதலமைச்சர் உடனான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தனக்கு இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு இணையாக அவரும் இத்தகைய ரீல்ஸ் மோகத்திற்கு இறங்கியிருப்பது விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பத்துக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி சென்ற சிறுமி, கல்லூரி பயின்ற மாணவி, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி என பல்வேறு தரப்பு பெண்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அடியோடு சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர மோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தேவா மற்றும் ஜீவாவுடான வீடியோவில் ரீல்ஸ் செய்வதோடு நின்றுவிடாமல் நன்றாக படிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். ஆனால் அந்த ஜீவாவும், தேவாவும் பயிலும் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் போது எப்படி படிக்க முடியும் என்ற கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமான சிறுவர்களை தேடி அலைந்து கண்டுபிடித்து தலைமைச் செயலகம் அழைத்துவந்து முதலமைச்சருடன் ரீல்ஸ் எடுப்பதில் செலுத்திய கவனத்தை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவலநிலையையோ, அங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதிலோ ஏன் செலுத்தவில்லை என்ற கேள்வியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நோக்கி எழுந்துள்ளது.
இன்ஸ்டா பிரபலங்களுக்கு இணையாக வைப் செய்வதற்காகவே முதலமைச்சர் உருவாக்கிய தளம் தான் இந்த VIBE WITH MKS… முதலமைச்சரின் மற்றொரு கோணத்தை வெளிப்படுத்துகிறோம் எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த தளத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த பிரபலங்களையும் அழைத்து விவாதித்து வருகின்றனர். முதலில் பாடகர்கள், பின்னர் விளையாட்டு வீரர்கள் அதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் என VIBE WITH MKS நிகழ்ச்சி நீண்டு கொண்டே செல்கிறது…
கடந்த வாரம் பாடகர் ஆண்டனி தாஸை வைத்து ஸ்டாலின் தான் வந்தாரு… சொன்னதெல்லாம் செஞ்சாரு எனும் ஒரு பாடலை பாடவைத்து அப்பாடலை பல கோடி ரூபாய் செலவில் புரோமோட் செய்தனர். நமக்கு நாமே வீடியோ எடுத்து புரோமோசன் எனும் பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்வதற்கு மாறாக, ஏற்கனவே பிரபலமானவர்களை அழைத்து நாமும் அவர்களுடன் இணைந்து வீடியோ வெளியிட்டால் இன்னமும் பிரபலமாகலாம் என்று யாரோ ஒருவர் கொடுத்த ஐடியா தான் தற்போது தேவா, ஜீவா வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
கடந்த தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளே தற்போது வரை நிறைவேற்றப்படாமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள் வரை நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. போதைப் பொருட்களின் நடமாட்டம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான தமிழகத்தைப் பற்றி எந்த கவலையுமே இல்லாமல் சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்கு போட்டியாக முதலமைச்சர் ரீல்ஸ் வெளியிட்டுக் கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் குழந்தைகளுடன் இணைந்து வீடியோ வெளியிடுவதோ அவர்களுடன் ரீல்ஸ் செய்து வைப் செய்வதோ தவறில்லை என்றாலும், விளம்பர மோகத்திலேயே நாள் முழுவதும் மூழ்கியிருந்தால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும், பொதுமக்களின் பாதுகாப்பும் எப்படி உறுதியாகும் என்பது தான் தமிழக மக்களின் பிரதான கேள்வியாக அமைந்துள்ளது.
















