மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் போர் காரணமாக உலக அளவில் எரிசக்தி விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு வருவதற்கு முன்பே வீட்டு உபயோக LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலும், அதற்கடுத்த நிலையில், ஈராக் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. மேலும், சுமார் நாற்பது நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கியதும் கடலில் உள்ள ரஷ்ய கப்பல்களில் இருந்த 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணையை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
இதனால் தேவைக்கதிகமான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் உள்ளது. ஏற்கெனவே படூர், மங்களூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் பெரிய அளவிலான நிலத்தடி எண்ணெய் கிடங்குகளில் கச்சா எண்ணெயை இந்தியா சேமித்து வைத்துள்ளது.
இது மட்டுமில்லாமல் அதிக அடர்த்தியுள்ள கச்சா எண்ணெயை தூய்மை படுத்தும் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தியாவில் அதிகம் உள்ளது. எனவே பெட்ரோல், டீசலுக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படவில்லை.
ஆனால், LPG கேஸ் சிலிண்டர் விஷயத்தில் இந்தியாவின் நிலை வேறுவிதமாக உள்ளது. 2010ம் ஆண்டு 10.6 கோடி மக்கள் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தனர்.
2014ம் ஆண்டு நாட்டின் பிரதமராக முதல் முறையாக பதவியேற்ற உடனேயே மோடி கொண்டுவந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புற வீடுகளில் LPG கேஸ் இணைப்பு வந்தது.
அதன் காரணமாக LPG வாடிக்கையாளர் எண்ணிக்கை 2014-ல் 14.5 கோடியாகவும் 2018-ல் 22.4 கோடியாகவும் உயர்ந்தது. தற்போது இந்தியாவில் 33 கோடி LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஓராண்டுக்கு 31 மில்லியன் டன் எரிபொருள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படுகிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்,குவைத்,மற்றும் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்துதான் எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் 90 சதவீத எரிபொருள் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில் இந்தியாவுக்கு வரவேண்டிய எரிபொருள் வரத்து தடைபட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் எல்பிஜி சேமிப்புக்கான கிடங்குகள் மங்களூரு மற்றும் விசாகப்பட்டினத்தில் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு கிடங்குகளில் சேமிக்கும் 1.4 லட்சம் டன்கள் எரிபொருள் இரண்டு நாட்களுக்கும் குறைவான நுகர்வுக்கு மட்டுமே வரும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 பில்லியன் கன மீட்டர் வரையிலான ஆரம்ப நிலத்தடி எரிவாயு சேமிப்பு திறன் கொண்ட கிடங்குகள் ஏற்படுத்த 2 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திட்ட ஒப்புதலுக்குப் பிறகு இதைக் கட்டிமுடிக்க சுமார் 4 ஆண்டுகள் ஆகும் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விறகு,மண்ணெண்ணெய் மற்றும் பயோகேஸ் எரிவாயுவிலிருந்து LPGக்கு இந்தியா மாறியது மிகப் பெரிய பொது சுகாதார வெற்றியாகும்.
அதற்கேற்ப இந்தியாவின் எரிவாயு அமைப்பு, இருப்பு வைப்பதற்கு பதிலாக தொடர்ச்சியான விநியோகத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள LPG விநியோகம் தடையில்லாமல் மக்களுக்குக் கிடைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் கச்சா எண்ணெயிலிருந்து LPG உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளன.
வணிக பயன்பாட்டை விடவும், வீட்டு நுகர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் வளைகுடா நாடுகளுக்கு வெளியே அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
















