தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில், காரில் உரிய ஆவணங்களின்றி பெண்கள் கொண்டு சென்ற, இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த குமாரி மற்றும் அவரது பெண் நண்பர்கள் என 3 பேர் காரைக்குடியில் உள்ள நகைக்கடைக்கு நகை வாங்க பணம் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, நான்கு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 11 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் குமரன் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொண்டு சென்ற 6 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உறவினருக்கு மருத்துவ செலவுக்காக பணம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
















