திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனி தேரோட்டத்திற்காக கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதிகாலை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
நான்கு மாட வீதிகளில் தேரோட்டத்தின் போது கோயில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
















