திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை சோதனைச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை பரிசோதித்தபோது வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், சோதனையை தீவிரப்படுத்தினர். அதில், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நகை கடைகளில் இருந்து மதுரையில் உள்ள நகை கடைகளுக்கு 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ நகைகள் எடுத்து சென்றது தெரியவந்தது.
இருப்பினும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால் நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் நிலை அலுவலர்கள், திருப்பத்தூர் கருவூலத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.
















