ரயில்கள் மீது கல்வீசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஓடும் ரயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் மீது தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கல் அல்லது எந்தவொரு பொருளையும் வீசுவது கடும் குற்றம் என்றும், இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கச் சிசிடிவி மற்றும் இதர நவீன கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















