சென்னையில் நடைபெற்ற பண்ணிசை பெருவிழா நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.
தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் விஜில் என்ற அமைப்பு பண்ணிசைப் பெருவிழாவை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம், மதுரை ஆதீனம்,தொண்டைமண்டல ஆதீனம், திண்டுக்கல் ஆதீனம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும் குழந்தைகள் சிவபெருமான் வேடமிட்டு திருவாசகம் பாடி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். ஆதீனங்கள் ஓதுவாமூர்த்திகளுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் பேசிய செங்கோல் ஆதீனம், திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தொண்டைமண்டல ஆதீனம், அடுத்த தலைமுறைக்கு பக்தியை கொண்டு சேர்ப்பது நம் கடமை என்று கூறினார்.
பின்னர் பேசிய திண்டுக்கல் ஆதீனம், , திருவாசகத்தால் ஓதுவாமூர்த்திகளும், ஓதுவாமூர்த்திகளால் திருவாசகமும் வாழ்வதாக தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய மதுரை ஆதீனம், , ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போயிருந்தாலும், அவர்களது மொழியும், பண்பாடும் நம்மைவிட்டு போகவில்லை என வேதனை தெரிவித்தார். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால்,முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும், பெரியோர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















