புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை கடந்த 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதியும், தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இருகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் கடந்த 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. கேரளம், அசாம் மாநிலங்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு உறுதியாகததால் வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து வேட்பாளர்களுக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
















