நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் பயண நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாற்காலிகளை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுகவினர் மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ராஜேஷ், காரைக்குடி செய்தியாளர் சதாம் உசேன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரின் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அடாவடியில் ஈடுபட்டு செய்தியாளர்களுக்கு காயம் ஏற்படுத்திய திமுகவினரின் அராஜக நடவடிக்கைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
















