தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நிறுவன தலைவர் கே.சி.திருமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அதிமுகவுடன், அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சரும், பாஜக தமிழக மேலிடப் பாா்வையாளருமான பியூஷ் கோயல் முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவா் கே.சி.திருமாறன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினாா். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட அரங்கில் இரு தலைவர்களையும் சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் 2 தொகுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், மதுரையில் ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியதாகவும் கூறினார். மேலும், என்டிஏ கூட்டணி மீது முழு திருப்தி கொண்டுள்ளதாக கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
















