சீனாவில் 82 வயது முதியவர் 105 நாட்களாகத் தினமும் 12 மணிநேரம் பயணம் செய்து நோய்வாய்ப்பட்ட மனைவியை மருத்துவமனையில் காண வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியான ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென் அசோங் என்ற 82 வயதான விவசாயி.
இவரது மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் நிங்போ நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களைக் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள தனது மனைவிக்காக சென் அசோங் தள்ளாத வயதிலும் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து உணவுகளைத் தயாரித்து பேருந்து மற்றும் ரயில் என மொத்தம் 6 மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இது ஒரு நாள் இரண்டு நாள் நடக்கவில்லை, 105 நாட்கள் இவ்வாறு அவர் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் பயணம் செய்து தனது மனைவியைக் கவனித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி மனைவியைப் பார்த்துவிட்டு முதியவர் வீடு திரும்ப தயாராக இருந்தபோது அவரது மனைவியின் இதயம் துடிப்பதை நிறுத்தியது.
அவர் மீண்டும் ஓடிச் சென்று தனது மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இந்தப் பிறவியில் நமக்கான பந்தம் முடிந்துவிட்டது” என்று கூறி விடைபெற்றார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் “உலகின் மிகச் சிறந்த கணவர்” எனச் சீன சமூக வலைதளங்களில் சென் அசோங் கொண்டாடப்படுகிறார்.
















