கூவம் ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலைத் திட்டத்தின் போது, ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றுக்குள் மண் கொட்டப்பட்டு நிலம் சமப்படுத்தப்படுவதால், ஆற்றின் ஓட்டம் பாதிக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.
இது குறித்த விசாரணையில், கூவம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 238 தற்காலிக கட்டுமான மேடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கூவம் ஆற்றங்கரையில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகளும், 39 ஆயிரம் மெட்ரிக் டன் இதர கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை மாநகராட்சி, கூவம் ஆற்றங்கரையில் இருந்த 14 ஆயிரத்து 257 ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 13 ஆயிரத்து 484 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.
தொடர்ந்து, கூவம் ஆற்றைப் பழைய நிலைக்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து 50 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், எந்த வித கட்டுமான கழிவுகளையும் கூவம் ஆற்றில் கொட்டக் கூடாது எனவும், பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் இயந்திரங்களை, வேலை முடிந்தவுடன் கூவம் ஆற்றுப்பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை நீர்வளத் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும்,
பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றின் நீரோட்டம் எக்காரணம் கொண்டும் தடைபடாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
















