திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மலைவாழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 19 ஆயிரம் நபர்களுக்கு வாக்குரிமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஆத்தி நாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் மற்றும் மலைப்பகுதியில் ஓர் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க அரசியல்வாதிகள் யாரும் பச்சைமலைக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து, பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். மேலும் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி 300-க்கும் மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















