மேற்காசிய போர் சூழல் குறித்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானிடையே நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மேலும், முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால், கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். அவரிடம் மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பிராந்திய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு, சவூதி இளவரசரிடம் இந்தியா சார்பில் தனது கண்டனத்தை பதிவு செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், கப்பல் வழித்தடங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தேவை குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, சவூதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் நலனுக்காக, அவர் அளித்து வரும் ஆதரவுக்கு சவூதி இளவரசரிடம் தான் நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















