தவெக-வின் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூர், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து உரிய அனுமதி கிடைக்காததால் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்தானது. தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த பகுதியில், 3 ஆயிரம் பேர் கூட நிற்க முடியாது என்பதால் அக்கட்சியின் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, தவெக தலைவர் விஜய் புகார் மனு அளித்தார்.
மனுவில் தவெக-வின் தேர்தல் பிரசாரங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில், பெரம்பூரில் மாற்று பகுதியிலும், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை பெரம்பூரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கவுள்ள விஜய், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே, தவெக-வின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















