ஈரானில் சிக்கி தவித்து தாயகம் திரும்பிய 327 மீனவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுப் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய மீனவர்கள் உணவு, குடிநீர், தங்குமிடம், மருத்துவ வசதி இன்றி சுமார் 45 நாட்களுக்கும் மேலாக ஈரானில் சிக்கி தவித்தனர்.
போரினால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இந்தநிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு 345 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த 327 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். தாயகம் திரும்பிய மீனவர்களை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















