ஈரான் முழுவதுமாக அழிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்த 10 மணி நேரத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதற்குச் சீனாவே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
எந்த நிபந்தனையும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்றும் ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஏற்கெனவே போரை முடிவுக்குக் கொண்டுவர எகிப்து, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முயற்சி எடுத்திருத்தன.
என்ன ஆனாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று உறுதியாக இருந்த ஈரான் அதிரடியாக அமெரிக்காவுடனான அனைத்து ராஜதந்திரத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாக அறிவித்தது.
இந்நிலையில் உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகப் போக்குவரத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஒப்புக்கொண்ட ஈரான் அமெரிக்காவிடம் 10 அம்ச கோரிக்கையுடன் போர் நிறுத்தத்திற்கும் ஒப்புக் கொண்டது.
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு இராணுவத் தலைமை தளபதி வழியாக ஈரான் மொழிந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்குப் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் சீனாவே இருந்ததாக தெரியவந்துள்ளது.
ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு இணங்க வைப்பதில் சீனா அழுத்தம் கொடுத்ததா என்ற கேள்விக்கு ஆம் என்றே தான் கேள்விப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பங்கை ஒப்புக்கொண்ட போதிலும் தனது அதிகாரப்பூர்வபோர் நிறுத்த அறிவிப்பில் சீனாவைக் குறிப்பிடாமல் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துக்கு வெளிப்படையாகப் பெருமை சேர்த்துள்ளார்.
இதன் மூலம் நம்பகமான ஒரு இடைத்தரகராக மட்டுமே பாகிஸ்தானைப் பயன்படுத்தி போர் நிறுத்த முடிவை தானே எடுத்ததாக காட்டியுள்ளார்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே மௌனமாக இருந்து வரும் சீனா, ட்ரம்பின் காலக்கெடு முடிந்தால் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்தை உணர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போர்நிறுத்தத்தில் தனது பங்கு குறித்து சீனா அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் கடந்த செவ்வாய்க் கிழமை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, ஈரான், இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அனைத்து வளைகுடா நாடுகளுடன் 26 முறை தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது, பாகிஸ்தானுக்கு அல்லாமல், சீனாவுக்கே ஈரான் மீது நேரடியான செல்வாக்கு உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளது.
முன்னதாக இராணுவ நடவடிக்கையின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தன.
சீனாவின் இந்த போர் நிறுத்த நடவடிக்கையில் அதன் சொந்த நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியும் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனா தனது எண்ணெய் தேவையில் பெரும் பகுதியை ஈரானிடமிருந்தே பெறுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ஈரானில் இருந்து 520 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை சீனா கொள்முதல் செய்து வருகிறது.
போர் காலத்திலும் தனது பெரிய எண்ணெய் இருப்புக்கள் மற்றும் காப்பீடு இல்லாத பழைய கப்பல்களான நிழல் கப்பல்கள் மூலம் மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெயை ஈரானிலிருந்து பெற்றது.
முழு அளவிலான போர் ஏற்பட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கைப்பற்றினாலும் , சீனாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு நேரடியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
ஏற்கனவே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவுக்கான வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது.
சீனாவின் பொருளாதார நலன்கள் என்பது வெறும் ஈரான் எண்ணெயுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. சீனாவின் தயாரிப்புகள் அனைத்தும் மத்திய கிழக்கு சந்தைகளை சென்றடைய ஈரான் ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது.
முழு அளவிலான போரால் சீனாவின் பெரும்பாலான ஏற்றுமதி பொருட்கள் செல்லும் செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான கடல்வழிப் பாதைகளும் ஆபத்துக்குள்ளாகும். இந்தப் பாதைகள் மூடப்பட்டால் உலகளாவிய வர்த்தகமே முடங்கி சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் பாதிப்படையும்.
இந்தப்போரை அமெரிக்காவுக்கு எதிரான உலகளாவிய சமநிலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பயன்படுத்தும் சீனா, அமெரிக்காவுடன் ஒரு ரகசிய பேரத்தை பேசி, அதன் மூலம் தனது பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
போர் காரணமாக தள்ளிவைக்கப் பட்ட ட்ரம்பின் சீனப் பயணம் வரும் மே மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் சதுரங்க ஆட்டத்தில் ஈரான் ஒரு பலியாடாக்கப்படுமா அல்லது சீனாவின் ஆதரவோடு தப்பிக்குமா என்பது காலத்தின் கையில்தான் உள்ளது.
















