பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலில் கடுமையான அணுகுமுறைகளைக் கையாளக் கூடாது. மாறாக, கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிவ சேனா கட்சி எம்.பி. தைர்யஷீல் சாம்பாஜிராவ் மானே, வங்கிக் கடன் வசூல் அணுகுமுறை குறித்து நேற்று (ஜூலை 24)
ஒரு கேள்வி எழுப்பினார்,
அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
சில வங்கிகள் வாராக் கடன் வசூலில் காட்டும் கெடுபிடி தொடர்பான புகார்களை நான் அறிவேன். அனைத்து பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன் வசூலில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. வங்கிகள் கடன் வசூலில் மனிதாபிமானம் மற்றும் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அரசு அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
அரசு இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவர் எழுப்பிய மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரட், “ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு வாரியம் இருக்கிறது. அவைதான் கடன்களுக்கான வட்டி, கூட்டு வட்டி ஆகியனவற்றை முடிவு செய்கின்றன. அதில் அரசு தலையிடுவதில்லை. ஏழை மக்கள் கடன் வலைக்குள் சிக்கிவிடாமல் இருப்பதற்காகத்தான் அரசு, பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனாவை செயல்படுத்துகிறது. தனியார் அடகுக் கடைக்காரரர்களிடமிருந்து மக்களைக் காக்கவே இத்திட்டம் உள்ளது. சாலையோர கடைக்காரர்களுக்காக ஆத்ம நிர்பார் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா மூலம் அவர்கள் தொழில் முதலீட்டுக் கடனைப் பெறலாம்” என்று பதிலளித்தார்.
வங்கி கடன் குறித்து தெலுங்கானா எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர், இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த மார்ச் வரை தமிழகத்தின் மொத்த கடன் தொகை 7.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இரண்டாவது இடத்தில் உ.பி.,யும், மூன்றாவது இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது,” என்று தெரிவித்தார்.