கரூர் இராம் நகரில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கி இருக்கிறார்கள்.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 14-ம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செயதனர். இதன் பிறகு, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இதன் பிறகும், விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி இதுவரை ஆஜராகவில்லை. இந்த சூழலில், செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் வீட்டிலும், ஆடிட்டர் சதீஷ்குமார் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.
துணை இராணுவப்படை பாதுகாப்புடன் 2 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், முதலில் கரூர் இராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக் குமார் வீட்டுக்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இராம் நகரில் அசோக் குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவுக்குச் சென்றனர். அங்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் நில அளவையர்களுடன் சென்றவர்கள், நிலத்தை அளவீடு செய்து, கட்டடத்தை மதிப்பீடு செய்தனர்.
மேற்கண்ட நிலம் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கிறது. ஆகவே, நிலம் தொடர்பான ஆவணங்களுடன் நிர்மலா நேரில் ஆஜராகும்படி, அக்கட்டடத்தில் சம்மன் ஒட்டி விட்டுச் சென்றனர். தொடர்ந்து, இராம் நகரிலுள்ள பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்துக்குச் சென்றவர்கள், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 10.85 லட்சத்திற்கு பதிவு செய்தது தொடர்பாக சார் பதிவாளர் பொறுப்பு சம்பூர்ணம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் கொடுத்தனர்.
மேலும், இராம் நகரில் அசோக் குமார் புதிதாகக் கட்டி வரும் பங்களாவை முடக்கம் செய்திருப்பதாகவும், ஆகவே, மேற்கண்ட பங்களாவை விற்பது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் சார் பதிவாளருக்கு கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஆடிட்டர் சதீஷ் குமார் அலுவலகத்துக்குச் சென்றவர்கள், அங்கு அவர் இல்லாததால், நேரில் ஆஜராகும்படி அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டி விட்டுச் சென்றனர்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வரும் நிலையில், அவரது தம்பி வீட்டில் சோதனை நடத்தியதோடு, புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவையும் முடக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.