பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழான மத்திய அரசு மீது பட்டியலின மக்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று, ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹனுமான் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் பரத்வாஜ், வருமான வரித்துறை முன்னாள் ஆணையர் நரேந்திர கௌர், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் கமல் ரத்தோர் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மேக்வால், “காங்கிரஸ் ஆட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். காங்கிரஸ் ஆட்சி இளைஞர்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு எதிராகவும், பட்டியலின மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. குறிப்பாகப் பட்டியலின மக்களுக்குப் பிரதமர் மோடியின் மீதும், மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீதும் அதிக நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.