பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்தியத் தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து, பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பன்னு பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரம் மிகுந்த இராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்த தகலறிந்து எனது மனம் நொறுங்கிப்போனது. இது ஒரு கோழைத்தனமான தீவிரவாதச் செயல். இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது எண்ணங்கள் முழுவதும் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினர் மீதுதான் இருக்கிறது. இதுபோன்ற தீவிரவாத செயல்களைப் பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Heartbroken by the loss of 9 valiant soldiers in Bannu Division, KPK, to a cowardly terrorist act that injured many. Such acts are utterly reprehensible. My thoughts are with the families of the martyred and injured. 🇵🇰 stands resolute against such terror.
— Anwaar ul Haq Kakar (@anwaar_kakar) August 31, 2023
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான், பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக் கைப்பற்றினர். அப்போதிருந்து, எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டில் வளர்ந்த தலிபான் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான், பெரும்பாலும் காவல்துறை இல்லாத எல்லையைக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்து, இண்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அறிக்கையில்,”பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் நேற்று அந்நாட்டின் இராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி, திடீரென இராணுவ வாகனத்தின் மீது மோதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இத்தாக்குதலில், நைப் சுபேதார் சனோபர் அலி உட்பட 9 வீரர்கள் பலியாயினர் மற்றும் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.