ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நம் நாட்டைப் பொறுத்தவரை, மாநில சட்டமன்றங்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டங்களிலும், நாடாளுமன்றத்துக்கு மற்றொரு காலக்கட்டத்திலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு இன்னொரு காலகட்டத்திலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதிலும், நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே அனைத்து மாநிலங்களிலும் ஒரு சமயத்தில் நடைபெறுகிறது. அதேசமயம், சட்டமன்றத் தேர்தல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே காலக்கட்டத்தில் நடப்பதில்லை. வெவ்வேறு காலக்கட்டங்களில்தான் நடக்கிறது.
இதனால், நிறைய பொருளாதார விரையம் ஏற்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு மட்டும் 62,000 கோடி ரூபாய் என்கிறது புள்ளி விவரங்கள். இது தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு தனித்தனியாக செலவு ஏற்படும். அதேபோல, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு தனியாக செலவு செய்ய வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தோடு சேர்த்து சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி விட்டால், ஒரே செலவோடு முடிந்து விடும். அதோடு, கால விரையமும், மனித உடல் உழைப்பு விரையமும் தவிர்க்கப்படும்.
ஆகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க. முன்மொழிந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்தபோதும், சரியான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், தற்போது புதிதாக ஒரு குழுவை அமைத்திருக்கிறது மத்திய அரசு. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இக்குழுவில் இடம்பெற மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அவரது இல்லத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.