சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதிக்கு, இராவணனாலேயே முடியவில்லை. உதயநிதி எல்லாம் தூசுக்குச் சமம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும், அரசியல் ஒட்டுண்ணிகளுக்குச் சனாதனத்தைப் பற்றி என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழகத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதோடு, உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களின் மனதையும் புண்படுத்தி இருக்கிறது. ஆகவே, உதயநிதி பேச்சுக்கு உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள், இந்து அமைப்புகள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சனாதனம் குறித்த உண்மையின் மூலம், உதயநிதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, பா.ஜ.க.வினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேசமயம், தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களும் உதயநிதிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கெனவே, மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் தலைமையான காங்கிரஸ் கட்சியும் உதயநிதிக்குக் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உதயநிதியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில்தான், உதயநிதியின் பேச்சுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “சனாதன தர்மத்தை வெட்கமின்றி தாக்கி, இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை விதைத்து வரும் “அரசியல் ஒட்டுண்ணிகள்”. இவர்களுக்கு சனாதன தர்மத்தைப் பற்றி என்ன தெரியும்? ராவணனின் ஆணவத்தால்கூட சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. அப்படி இருக்க, ”அரசியல் ஒட்டுண்ணிகள்” எப்படி அதைச் செய்ய முடியும்? நாடு தற்போது அடைந்துவரும் முன்னேற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவின் உயர்ந்து வரும் உலகளாவிய கௌரவத்தை அவர்கள் விரும்பவில்லை.
இதன் காரணமாக, நமது பாரம்பரியத்தை அவமதிக்கவும், சிறுமைப்படுத்தவும், கேவலமான மற்றும் இழிவான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ராவணனின் ஆணவத்தால் அழிக்க முடியாத, கம்சனுக்கு வளைந்து கொடுக்காத, பாபர் மற்றும் ஔரங்கசீப்பின் அட்டூழியங்களுக்கு அடங்காமல் திமிரிக்கொண்டு வெளியே வந்த சனாதனத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை அரசியல் ஒட்டுண்ணிகள் மறந்துவிட்டார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இது வெறுக்கத்தக்க செயலேயன்றி வேறில்லை.
மேலும், சனாதன தர்மம் மனித நேயத்தின் மதம். அதை நோக்கி விரல் நீட்டுவது மனித குலத்தை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு ஒப்பானது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மோசமான காலங்களில் உதவாத அல்லது பாதுகாப்பு கொடுக்காத மதம் அல்லது இனம் எதுவும் இல்லை. சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் தங்களை சிறப்பு சலுகை பெற்றவர்கள் என்று பெருமை கொள்ளவில்லை. மாறாக, சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாத முட்டாள்கள், சூரியனை நோக்கித் துப்ப முயன்றாலும், அது தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்” என்று கூறியிருக்கிறார்.