நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்பி இருந்தன. ஆகவே, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி அனுப்பியது. அதேசமயம், இந்தியாவுக்கு முன்னதாகவே நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட வேண்டும் என்று லூனா-25 என்கிற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியது. ஆனால், இந்த விண்கலம் நிலவில் தரையிற்குவதற்கு முன்னதாகவே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டது.
அதேசமயம், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகள் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தன. இந்த வெற்றிக் களிப்போடு, சூட்டோடு சூடாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இத்திட்டம் வெற்றியடைந்தால் இந்தியாவுக்கு இன்னொரு மணிமகுடம் சூட்டப்படும்.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது வரலாற்று சாதனை என்று பாராட்டிய ஜோ பைடன், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், விண்வெளி ஆய்வில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டுத் தலைவர்களும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.