தமிழகத்தில் மத்திய அரசு சார்பில், புதிய 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்க முடிவு செய்தபோது, அதனை திமுக தடுத்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் 2-வது கட்ட பாதயாத்திரையை, கடந்த 4-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரை சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களைச் சந்தித்து, 3-வது முறையாகப் பாரதப் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற ஆதரவு கேட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில், 2-வது நாளாக நேற்றும் பாதயாத்திரை சென்றார்.
அப்போது, கடமலைக்குண்டு ஆத்தரங்கரைபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு தவறிவிட்டது என்றும்,
முல்லைப் பெரியாறு, கண்ணகி கோவில் ஆகிய விவகாரங்களில், தமிழகத்தின் உரிமையைத் திமுக அரசு விட்டுக்கொடுத்து விட்டது என்றும், இதற்கு காரணம், இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்பதால்தான்.
மேலும், தமிழக – கேரள எல்லைகளில் குப்பை கழிவுகளைக் கொட்டும் கேரள அரசைக் கண்டிக்காமலும் திமுக அரசு மவுனமாக உள்ளது என்றார்.
தமிழகத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவும், தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய அரசு முயற்சி செய்தது.
ஆனால், அந்த நல்ல திட்டம் தமிழகத்திற்கு வந்து, பொது மக்கள் பயன்பெறக்கூடாது என்பதற்காக அதனை திமுக தடுத்துவிட்டது என குற்றம் சாட்டினார்.