இந்தியாவில் முதல் முறையாக ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
டெல்லியில் இன்றும், நாளையும் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில், ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் முதல் ஜி20 உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இம்மாநாட்டை கௌரவிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சர்வதேச மணல் சிற்பக் கலைஞருமான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஜி20 உச்சி மாநாட்டின் நினைவாக 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்ட ஜி20 லோகோவை உருவாக்கி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய சுதர்சன், “முதல் முறையாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பெருமைப்படுத்தும் வகையில், பூரி கடற்கரையில் ஜி20 லோகோவுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய மணல் சிற்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது. என் மாணவர்களின் உதவியோடு நான் இந்த மணல் சின்னத்தை உருவாக்கியுள்ளேன்” என்று கூறினார்.
இதற்கு முன்பு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இதே பூரி கடற்கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவத்தில் மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.