சனாதனத்தை எதிர்ப்பது என்பதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம். இதன் காரணமாகவே, தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது குறித்து ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இண்டியா கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடந்து முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.
அவருக்கு ஆதரவாகவும், சனாதன தர்மத்துக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பேசுகிறார். மேலும், சனாதன தர்மத்துக்கு எதிராகவே, இண்டியா கூட்டணி உருவாகி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் இது.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் தங்களது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், எந்தவொரு மதத்தைப் பற்றியும் ஆட்சேபனைக்குரிய அறிக்கைகளை வெளியிட அரசியலமைப்பில் உரிமை உள்ளதா? என்பதையும் இந்தியா கூட்டணி, காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தெளிவுபடுத்த வேண்டும் அல்லது அரசியலமைப்பின் விதிகள் பற்றி இண்டியா கூட்டணிக்குத் தெரியாதா?
சனாதன தர்மத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கடைகளில் “அன்பு” என்கிற பெயரில் வெறுப்பை ஏன் விற்கிறார்கள்? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இயங்கும் வெறுப்பு மெகா மால் அது. மக்களைப் பிரித்து ஆள்வதுதான் அதன் நோக்கம்” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.