வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏராளமானோர் தீக்காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மளமளவென 10 தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், கட்டடத்தில் தீயில் சிக்கித் தவித்த 70 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 50 பேர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து விட்டனர். எனினும், இக்கட்டடத்தில் 150-க்கும் மேற்பட்டோரு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், மிகவும் குறுகிய தெருவில் அமைந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனங்கள் 300 முதல் 400 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கு அக்கட்டடத்தில் எவ்வித வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பல கொடிய தீவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 2018-ம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு முன்பு, ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள 3 அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.