ராகுல் காந்தி நீண்டகாலமாக அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செய்தது என்ன? என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கவிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, நீண்டகாலமாகவே அமேதி தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்குச் செய்தது என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு தேச மக்கள் மீது துளியும் அக்கறை இல்லை. பல்வேறு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். பல திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே செய்ததையே மீண்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். மக்களுக்காக காங்கிரஸ் கட்சி சிந்திக்கவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் எல்லா இடங்களிலும் நிராகரிப்பார்கள்.
தனிநபர் வருமானம் முதல் தண்ணீர் சேகரிப்பு, நலத்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என எல்லாவற்றிலும் தெலங்கானா முதலிடத்தில் இருக்கிறது. ஐதராபாத்தில் பல தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன” என்றார். அதேசமயம், டெல்லி மதுபான கொள்கை ஊழல் பண மோசடி வழக்கில் கவிதா சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக, செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், நாளை ஆஜராகப் போவதில்லை என்று கவிதா தெரிவித்திருக்கிறார்.