அமெரிக்காவில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டு மனு அனுப்பி இருக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கண்டூலா. இவர், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரில், முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் மாணவி ஜான்வி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிகவேகமாக வந்த காவல்துறை ரோந்து வாகனம் மோதியது. இதில், சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கண்டூலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்கண்ட காவல்துறை வாகனத்தை, கெவின் டேவ் என்ற அதிகாரி ஓட்ட, டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு காவல்துறை அதிகாரியும் உடனிருந்தார். மேற்கண்ட வாகனம் 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த நிலையில், விபத்துக்கு பிறகு சியாட்டில் காவல்துறை சங்கத் தலைவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அதிகாரி டேனியல், வாகனம் 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே வந்ததாகக் கூறியதோடு, மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தார்.
இந்த உரையாடல், காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரெரின் உடையில் இருந்த கேமராவில் பதிவானது. இந்த ஒளிப்பதிவு சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கும் காரணமானதோடு, கேலி பேசி சிரித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, மேற்கண்ட விபத்து குறித்து சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல் ஆடரெர், “நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சங்கம் அளித்திருக்கும் விளக்கத்தில், “விபத்து நடந்தபோது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் ஆடரெர் கூறிய கருத்துக்கள் எதுவும் அந்த ஒலிப்பதிவில் வெளியிடப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மாணவி குறித்து கேலி பேசிய டேனியல் ஆடரெரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த மனு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.