தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில், தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், அவசரம்.
பல கிராமங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி கோரிக்கையை மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது.
குடிநீர்த் தொட்டிகள், சிறிய தடுப்பணைகள், கடலில் அதிகம் கலக்கும் நீரைச் சேமிக்க ஆறு, குளம்,குட்டைகளைத் தூர் வாரிச் சேமித்து வைப்பது போன்ற பல்வேறு நீர் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தப் போர்க்கால அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்.
இது போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியை, திட்டங்களைப் பயன்படுத்த மாநில அரசு தயங்கக் கூடாது. அதே போல், பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.